பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வெற்று விடைத்தாள் கட்டுகள், தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பள்ளிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத வாகனங்களில் அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில், விடைத்தாள் கட்டுகள் சரிந்து கீழே விழும் அளவிற்கு, அதிகமான கட்டுகளை அனுப்புவது, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பத்தாம் வகுப்பு மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வுகள், மார்ச் 22ம் தேதி துவங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள், 28ம் தேதி துவங்குகின்றன. இந்த தேர்வுகளுக்கான வெற்று விடைத்தாள் கட்டுகள், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பள்ளியிலும், தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பட்டியலைப் பெற்று, அதற்கு தகுந்தபடி கணக்கிட்டு, வெற்று விடைத்தாள் கட்டுகள் மற்றும் எழுதி முடித்த விடைத்தாள்களை பாதுகாப்புடன் வைத்து, ‘சீல்’ இடுவதற்கான பெரிய கவர்கள் ஆகியவை, பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
எந்தெந்த பள்ளிக்கு, எந்த விடைத்தாள் கட்டுகள் அனுப்பப்படுகின்றன, எத்தனை விடைத்தாள்கள் அனுப்பப்படுகின்றன என்ற விவரங்களை எல்லாம் பதிவு செய்து, அதில் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கையெழுத்தை பெற்றுக் கொண்டு, அதன் பின் விடைத்தாள் கட்டுகளை தேர்வுத் துறை வினியோகம் செய்கிறது.
கொடுக்கப்பட்ட விடைத்தாள்களுக்கு, பள்ளி நிர்வாகம், சரியான கணக்கை திரும்ப தெரிவிக்க வேண்டும். விடைத்தாள்களை தவறான முறையில் வேறு யாரும் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், இப்படி பல்வேறு பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் அறிந்த தேர்வுத்துறை, பத்தாம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள்களை எந்தவித பாதுகாப்பும் இல்லாத வாகனங்களில் அனுப்பி வருவது, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை மண்டலம் (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்) தவிர்த்து, பிற மண்டலங்களுக்கான விடைத்தாள் கட்டுகள் ஏற்கனவே அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பள்ளிகளுக்கு விடைத்தாள் கட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஆட்டோக்களிலும், ‘அபே’ ஆட்டோக்களிலும் எந்தவித பாதுகாப்பும் இன்றி, அதிகமான விடைத்தாள் கட்டுகளை நேற்று ஏற்றிச் சென்றனர். ஆட்டோக்களின் இரு புறமும் விடைத்தாள் கட்டுகள் கீழே சரிந்து தொங்கிக் கொண்டிருந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல் பலரும் விடைத்தாள் கட்டுகளை எடுத்துச் சென்றனர்.
இதுபோன்று பாதுகாப்பின்றி எடுத்துச் செல்லப்படும் விடைத்தாள் கட்டுகளில் ஒரு கட்டோ அல்லது சில விடைத்தாள்களோ கீழே விழுந்து மாயமானால், தேர்வின் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். காணாமல் போகும் விடைத்தாள்களை பயன்படுத்தி, சரியான விடைகளை நிரப்பி, பல்வேறு முறைகேடுகளை செய்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
அல்லது தேர்வு அறையில் திடீரென விடைத்தாள்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும், நேரம் வீணாகி, மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
மேலும், தேர்வுத்துறையின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையும், பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படும். இவை எல்லாம் தெரிந்தும், பாதுகாப்பு மிகுந்த வாகனங்களில் விடைத்தாள் கட்டுகளை வினியோகம் செய்ய, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.
இதற்குமா பணத்தை பார்ப்பது? தேர்வுத்துறையில் இருந்து, பள்ளிகளுக்கு விடைத்தாள் கட்டுகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் அதற்கான வாகன ஏற்பாடுகள் ஆகியவற்றை, பள்ளி நிர்வாகங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய பள்ளிகள், தங்களிடம் உள்ள பெரிய வேன் உள்ளிட்ட வாகனங்களை வைத்து, விடைத்தாள் கட்டுகளை எடுத்துச் செல்கின்றன.
வாகன வசதியில்லாத பள்ளிகளின் பிரதிநிதிகள், வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்களை வாடகைக்கு எடுத்தால் அதிக செலவு ஏற்படும் என்பதால், குறைந்த செலவில் ஆட்டோ போன்ற சிறிய வாகனங்களில் விடைத்தாள் கட்டுகளை எடுத்துச் செல்கின்றனர். தேவையற்ற விபரீதங்கள் ஏற்படும் முன், இந்த விஷயத்தில் தேர்வுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.
நன்றி தினமலர் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக